02/07/2021
உலக சமாதானத்தின் அடையாளமாக ஓட்டமாவடி-மஜ்மா நகர் கொரோனா அடக்கஸ்தலம் கருதப்படும் - கல்குடா மீடியா போரம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்-முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பலர் நேற்று ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நெளபர், சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் உள்ளிட்ட பிரதேச சபையின் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது ஓட்டமாவடி-மஜ்மா நகர் கிராமத்தில் இலங்கையில் கோவிட்- 19 தொற்றினால் மரணிக்கும் பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் வெளிநாட்டவர்கள் என அனைவரையும் நல்லடக்கம் செய்யும் ஓர் இடமாக இப்பிரதேசம் காணப்படுவது குறித்தும் அங்கு ஓட்டமாவடி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
பல்வேறு விடயங்களைக்கேட்டறிந்து கொண்ட ஊடகவியலாளர்கள் சார்பில் கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் குறிப்பிடுகையில், இக்கோவிட் -19 அடக்கஸ்தலம் இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து பலதரப்பட்ட சமூகங்களைச் சார்ந்த மனிதர்களின் உடல்களை தன் கையால் சுமர்ந்து நல்லடக்கம் செய்யும் பணியினை ஓட்டமாவடி பிரதேச சபையின் முஸ்லிம் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றமை எமது தேசத்தின் வரலாற்றில் நினைத்துப் பார்க்க முடியாத எழுதப்பட வேண்டிய வரலாறாகும்.
இவ்வடக்கஸ்தலம் உலக சமாதானத்தின் அடையாளமாகக் கருதப்பட வேண்டுமென கல்குடா மீடியா போரம் அறிக்கை செய்வதாக அவர் குறிப்பிட்டார்.
இப்பணி தொடர்பில் ஊடகவியலாளர்கள் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.