20/05/2026
சத்தமில்லாமல் உயர்வது விலைகள் அல்ல… சாமானிய மக்களின் வாழ்க்கைச் சுமை
தங்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் மட்டும் தான் நம்ம கண்ணுக்கு தெரிகிறது.
ஆனால் உண்மையில் சத்தமில்லாமல் உயர்ந்து கொண்டிருப்பது சாமானிய மக்களின் வாழ்க்கைச் செலவு.
நம்ம வீட்டுக்குள் தினமும் பயன்படுத்தும் சோப்பு, எண்ணெய், டிடர்ஜெண்ட், பால், மளிகைப் பொருட்கள், காய்கறிகள் இவையெல்லாம் யாருக்கும் பெரிதாக தெரியாமல் தினந்தோறும் விலை ஏறிக்கொண்டே இருக்கின்றன.
2026 மார்ச் மாதத்தில் 16 ரூபாய்க்கு வாங்கிய டிடர்ஜெண்ட் சோப், இன்று 22 ரூபாய்.
வெறும் இரண்டு மாதங்களில் 6 ரூபாய் உயர்வு.
இது ஒரு சோப்பின் கதை மட்டும் இல்லை.
சமையல் எண்ணெய், ஷாம்பு, காய்கறி, மசாலா பொருட்கள், மருந்து, பேருந்து கட்டணம் என அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக விலை உயர்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்த உயர்வுகள் தனித்தனியாக பார்க்கும்போது பெரியதாக தெரியாமல் இருக்கலாம்.ஆனால் ஒரு நடுத்தர குடும்பம் தினமும் வாங்கும் அனைத்து பொருட்களின் கூடுதல் செலவையும் மாத இறுதியில் கணக்கிட்டுப் பார்த்தால், சம்பளத்தை விட செலவுதான் வேகமாக ஓடுகிறது என்பது புரியும்.
சம்பளம் மட்டும் அதே இடத்தில் நிற்கிறது.
ஆனால் செலவு மட்டும் ராக்கெட் வேகத்தில் பறக்கிறது.
ஒரு நடுத்தர குடும்பம் இன்று மாத
சம்பளத்தை வாழ்க்கைக்காக செலவு செய்யவில்லை…
இந்த மாதத்தை எப்படி கடப்பது? என்பதற்காகவே போராடுகிறது.
ஒரு சாமானிய குடும்பம் இன்று ஆசைக்காக வாழவில்லை.
அடிப்படை தேவைகளுக்காகவே போராடுகிறது.
மாத சம்பளம் வரும் நாளில் கூட சந்தோஷம் இல்லை.
இந்த மாதம் எதை குறைக்கலாம்? என்ற பயம்தான் இருக்கிறது.
முன்னாடி ஹோட்டலுக்கு போவது ஆடம்பரம்.இன்று வீட்டுக்குள் சமைப்பதே செலவான விஷயமாக மாறிக்கொண்டிருக்கிறது.
முன்னாடி குழந்தை கேட்டதை வாங்கிக் கொடுத்த பெற்றோர்,
இன்று கடையில் விலையை பார்த்து,
அடுத்த மாதம் வாங்கிக்கலாம்… என்று சொல்லி குழந்தையை இழுத்துக் கொண்டு வருகிறார்கள்.
முன்னாடி ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு கடைக்குப் போனால் இரண்டு பை பொருட்கள் வரும். இன்று அதே ஆயிரம் ரூபாய்க்கு ஒரு கவரே முழுமையாக நிரம்பவில்லை.
இதுதான் இன்றைய நடுத்தர குடும்பங்களின் உண்மை நிலை.
வீட்டு வாடகை உயர்வு…
மின்கட்டணம் உயர்வு…
பள்ளிக் கட்டணம் உயர்வு…
மருத்துவச் செலவு உயர்வு…
அதோடு அன்றாடப் பொருட்களின் விலை உயர்வு…
ஆனால் வருமானம் மட்டும் பழைய அளவிலேயே நின்றுகொண்டிருக்கிறது.
தங்கம் வாங்காத மக்கள் இருக்கலாம்.
ஆனால் சோப்பு வாங்காமல் யாராலும் வாழ முடியாது.
பெட்ரோல் போடாதவர்கள் இருக்கலாம்.
ஆனால் அரிசி, எண்ணெய், காய்கறி இல்லாமல் எந்த வீட்டும் இயங்காது.
இதனால் இன்று மக்கள் சேமிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.
சிலர் நகை அடகு வைக்கிறார்கள்.
சிலர் கடன் வாங்குகிறார்கள்.
சிலர் தேவைகளை குறைத்துக் கொண்டு வாழ்க்கையை தள்ளிச் செல்கிறார்கள்.
தங்கம் விலை உயர்ந்தால் செய்தி வருகிறது.
பெட்ரோல் விலை உயர்ந்தால் விவாதம் வருகிறது.
ஆனால் சமையலறையில் தினமும் நடக்கும் இந்த அமைதியான விலை உயர்வுதான்
சாமானிய மக்களின் வாழ்க்கையை மெதுவாக நசுக்கிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பொருளாதார சுமை.