10/08/2026
திருச்சிற்றம்பலம்
நாதனை நாதமிகுத் தோசைய தானவனை
ஞான விளக்கொளியாம் ஊனுயி ரைப்பயிரை
மாதனை மேதகுதன் பத்தர் மனத்திறையும்
பற்றுவி டாதவனைக் குற்றமில் கொள்கையனைத்
தூதனை யென்றனையாள் தோழனை நாயகனைத்
தாழ்மக ரக்குழையுந் தோடு மணிந்ததிருக்
காதனை நாயடியேன் எய்துவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே
ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம் - ஏழாம் திருமுறை, திருக்கானப்பேர்.
திருச்சிற்றம்பலம் பொழிப்புரை:
உலகிற்குத் தலைவனும், நுண்ணிய எழுத்தோசை யும், பரியதாகிய இசையோசையுமாயும், ஞானமாகிய விளக்கினது ஒளியாயும், உடம்பின்கண் உள்ள உயிரும்! நிலத்தில் வளரும் பயிரு மாயும் நிற்பவனும், மாதொரு பாகத்தை உடையவனும். மேலான தகுதியையுடைய, தன் அடியார்களது உள்ளத்தின்மேல் வைத்துள்ள பற்றினைச் சிறிதும் நீங்காதவனும், குற்றம் இல்லாத கொள்கையை யுடையவனும், என்னைத் தன் தொண்டினிடத்து ஆளுகின்ற என் தூதனும், தோழனும், தலைவனும் ஆகியவனும், தாழத் தூங்குகின்ற மகரக் குழையையும் தோட்டையும் அணிந்த அழகிய காதினை யுடையவனும் ஆகிய, மிக்க நீரையுடைய, ` திருக்கானப்பேர் ` என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற, காளை வடிவினனாகிய பெரு மானை, நாய்போலும் அடியேன் தலைக்கூடப்பெறுவது எந்நாளோ!.
குறிப்புரை:
` நாதன் ` என்றதிலும், இரண்டன் உருபு விரிக்க. ` மிகுத்த ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ` பாதனை ` என்பதே பாடம் போலும் ! ` என்றனை ஆள் ` என்பது, ` தூதன் ` என்றது முதலிய மூன்றனோடும் இயையும். தலைவனாய் இருப்பவனே தூதனாயும், தோழனாயும் இருக்கும் வியப்பினைப் புலப்படுத்தும் முகத்தால், அவனது பேரருட்டிறத்தை நினைந்து உருகியவாறு ; அதனை, ` நாயடியேன் ` என்றதனாலும் உணர்க. குழை அணிதல் அப்பனாதலையும், தோடணிதல் அம்மையாதலையும் குறிக்கும்
https://t.me/+-nIYF_5YxiE3N2Nl