12/08/2019
எங்கள் குடும்பமும் அருகில் உள்ள குடும்பத்தாரும் சேர்ந்து கொண்ட ஒரு பயணம்... அது உண்மையில் ஒரு ஆனந்த அனுபவம்!
இருவீட்டு பிள்ளைகளின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு... பயணம் செல்கிறோம் என்று முடிவெடுத்த தருணத்திலிருந்து!
ஒரு வாரம், 6 நாட்கள்.... ஒரு நாள்... நாளை விடியற்காலை என்று நாட்கள் எண்ணப்பட்டு குதூகழித்த அவர்கள், பயண ஏற்பாடுகளாக குத்துப்பாட்டு, நடனத்திற்கு பாட்டு, இரவு நேர பயணத்திற்கு என்று பாட்டுகள் விரலியில் பதிவு செய்யப்பட்டு தயார்!
வீட்டு மகளீருக்கு சமையல் கட்டிலிருந்து இரண்டு நாட்கள் விடுதலை என்பதே பயணத்தின் உள்நோக்கம், புரிந்து கொண்ட நாங்கள் அனைவரும் ஒத்துழைத்தோம், நமக்கும் இரண்டு நாட்கள் விடுதலை என்பது 'பின் குறிப்பு'! அவர்களும் அனுபவித்தார்கள், அவர்களுடன் கணவன்மார்களும்!
அது ஒரு கோடைகால ஆரம்பம், ஏப்ரல் கடைசி நாட்கள், இரண்டு பகல் ஒரு இரவு!
பிரயாணம் பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் என்பதால், அரசு வன இலாக்கவின் கட்டுப்பாட்டில் தான் தங்கும் விடுதிகள் உள்ளது, டாப் ஸ்லிப் (https://www.atrpollachi.com/where-to-stay/) அல்லது பரம்பிக்குளம் (http://www.parambikulam.org/ #) இணையதளத்தில் மட்டுமே சரணாலயத்தில் தங்குவதற்கான இடம் முன்பதிவு செய்ய வேண்டும். தனியாருக்கு இதில் உரிமையில்லை!
பிரயாணம் செய்வதிலேயே நேரம் கழித்து விட கூடாது என்பதுவாக பிரயாண திட்டம் இருக்க, அதிகாலை 2:30 மணிக்கு பிரயாணம் தொடங்கியது. பிரயாணம் ஈரோடிலிருந்து காங்கேயம், பொள்ளாச்சி, வேட்டைக்காரன் புதூர் வழியாக டாப் ஸ்லிப், அங்கு செல்வதற்கு முன்பாக பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயில் தரிசனம், முதல் தரிசனம் அபிசேகம், ஆராதனைகள், குடும்ப அர்ச்சனை முடித்துக்கொண்டு, மன மகிழச்சியுடன் பிரயாணம் தொடர்கிறது.
தங்கும் விடுதிகள் அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ளதால் முன்னெச்சரிக்கையாக தங்கும் விடுதிகள், அங்கு கிடைக்கும் உணவுகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும், அப்படி சென்று தங்கும் விடுதிகள் அருகிலேயே அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு குடும்பம் நமக்கு உணவு சமைத்து கொடுக்க இருக்கிறார்கள். அவர்களின் தொலைபேசி எண் அலுவலகத்தில் பெற்று, செல்வதற்கு முன்பே தொடர்பு கொள்வது நன்று. குழந்தைகளுக்கு தேவையான பால், தயிர், மற்றும் அனைவருக்கும் தேவையான அளவு இறைச்சி கொண்டு செல்ல வேண்டியது அவசியம், இல்லையென்றால் மீண்டும் நாம் சமதளதிற்கு வரவேண்டிய நிலை ஏற்படும்.
நாங்கள் அப்படியே திரும்பி வேட்டைக்காரன் புதூர் வந்து இறச்சி மற்றும் பால் பொருட்கள், மேலும் இரவு வெளியில் வரமுடியாது என்பதால் உள் விளையாட்டு உபகரணங்கள், பந்து, சீட்டு கட்டு போன்றவற்றை வாங்கி கொண்டோம்.
மது பானங்களுக்கு அனுமதியில்லை, இரவில் சத்தாமாக இசை கருவிகள், மற்றும் இசை தட்டுகள் இசைக்க அனுமதியில்லை.
நாங்கள் தங்கியிருந்த அம்புலி இல்லம் டாப் ஸ்லிப் உள்ள சில சிகரங்களில் ஒன்று உச்சம், நிசப்தம் விடுதியை தவிர எங்கும் மின் விளக்குகள் கிடையாது. சுற்றும் முற்றும் பார்த்தால் கறுகும் இருட்டு. இரவு முழுவதும் மின்மினிப் பூச்சிகளின் விடுதியை சுற்றி அருகில் இருந்த மரங்களிலும் செடிகளிலும் பண்டிகை காலங்களில் தொடர் விளக்குகள் கட்டியது போல் அலங்காரம் செய்து கண்ணிற்கும் மனதிற்கும் இதமாக இருந்தது. வன விலங்குகள் வருவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்க, இருட்டில் அருகில் இருந்தால் கூட தெரியாது, திக் திக் என்று இருந்தது இரவு அனுபவம்.
டாப் ஸ்லிப் தங்கும் அனுபவம் சிறப்பு, மேலும் யானையின் மீது சரணாலயத்தில் ஒரு உலா, அது ஒரு புது நல் அனுபவம் மற்றும் பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் அரசு கொடுத்த பேருந்தில் 2 மணி நேர காட்டுக்குள் பயணம், வழிகாட்டி ஒவ்வொரு இடத்தையும் சுட்டிக்காட்டி தமிழிலும் மலையாளத்திலும் விளக்கி கூற, மேலும் கர்ம வீரர் காமராஜர் காலத்தில் தான் இவ்விரு சரணாலயங்கள், பரம்பிக்குளம் அணை மற்றும் அதனை சுற்றியுள்ள வட்டாரமும் முன்னேறியது என்று வழிகாட்டி கூறும் போது, அவர் மேல் இருந்த மதிப்பு மேலும் அதிகமானது!
அடுத்தநாள் காலை சரணாலயத்தில் இருந்து கிளம்பி வீடு திரும்பும் வழியில் அமைந்துள்ளது சேதுமடை அங்கே ஆழியாறு அணையில் திறக்கும் தண்ணீர் சேதுமடையில் ஓடை போல வர நன்றாகவே குளித்து விளையாடி மகிழ்ந்தோம், அங்கு குளித்து விளையாடிவிட்டு மாலை கிளம்பி், முன்னிரவு வீடு திரும்ப நல்லதொரு பிரயாணம்!
குறிப்பு: இந்த இரு சரணாலயத்திற்கு சென்று தங்குவதற்கான உகந்த காலம், ஜூலை - டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பசுமையாக இருக்கும்.